புதுடெல்லி,
ஹாங்காங் நாட்டு சரக்கு கப்பல் ஒன்று கடந்த 13ந் தேதி பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் சென்று கொண்டிருந்தது. இதில் 26 இந்தியர்கள் இருந்தனர். அப்போது கடலில் வீசிய பயங்கர புயலில் சிக்கிய இந்த கப்பல் திடீரென கவிழ்ந்தது. இது குறித்து அருகாமையில் சென்று கொண்டிருந்த பிற கப்பல்களுக்கும், ஜப்பான் நாட்டு கடலோர காவல் படைக்கும் தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அந்த கப்பல்கள் அங்கு விரைந்து சென்று கவிழ்ந்த கப்பலில் இருந்த இந்தியர்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டன. இதில் 15 பேர் மீட்கப்பட்டனர். மீதமுள்ள 11 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள், மாயமான இந்தியர்களை மீட்கும் பணிகளை தீவிரப்படுத்துமாறு ஜப்பான் கடலோர காவல் படையினரை கேட்டுள்ளனர். இந்த விபத்து குறித்த தகவல்களை 00911123012113, 00911123017905, 00911123015300 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு அறியலாம் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று தெரிவித்தார்.