உலக செய்திகள்

ஈரானில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த 3 வாரங்களாக போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது.

தெஹ்ரான்,

ஈரான் தலைநகர் தெஹ்ரான் மாகாணத்துக்கு உட்பட்ட அந்திஷே நகரில் 'அர்காவன்' என்ற பல அடுக்குமாடி வணிக வளாகம் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான கடைகள் மற்றும் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த வளாகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில், திடீரென ஒரு பகுதியில் தீப்பிடித்தது. அடுத்த சில நிமிடங்களில் தீ வேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதனால் வணிக வளாகம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. கடைகளுக்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடினர்.

பின்னர் புகையினால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் மற்றும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடித் தீயைக்கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 41 பேர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப் பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து ஈரான் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த 3 வாரங்களாக போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. எனவே, இந்த தீ விபத்துக்கும், போர் பதற்றத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.