அபுஜா,
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் ஐ.எஸ். அமைப்பினை நிறுவ போகோ ஹரம் பயங்கரவாதிகள் முயற்சித்து வருகின்றனர். கடந்த 2009ம் ஆண்டில் இருந்து அந்நாட்டில் அவர்களின் ஆதிக்கம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், போர்னோ ஸ்டேட் பகுதியருகே அதன் தலைநகர் மைடுகுரியில் உள்ள கோசிப் என்ற கிராமத்தில் பண்ணை நிலங்களில் விவசாயிகள் பலர் வேலையில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.
அவர்களிடம் நெருங்கி வந்த ஒருவன் உணவு தரும்படி கேட்டுள்ளான். அவனை விவசாயிகள் சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்துள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் பயங்கரவாதிகள் கும்பலாக வந்து விவசாயிகளை கடுமையாக தாக்கி கொடூர முறையில் கொலை செய்துள்ளனர்.
இதில் 110 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். பலர் படுகாயம் அடைந்து உள்ளனர். இதனை, உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதேபோன்று ஐ.நா. அமைப்பின் குடியிருப்பு மற்றும் மனிதநேய ஒருங்கிணைப்பாளர் எட்வர்டு கால்லன் உறுதிப்படுத்தி உள்ளார்.
இதுதவிர அந்த பயங்கரவாத கும்பல் தங்களுடன் பெண்களையும் கடத்தி சென்றுள்ளது.