உலக செய்திகள்

அமெரிக்காவின் 2 நாள் தாக்குதல்களில் 14 பேர் பலி: ஈரான்

குவைத் மற்றும் பஹ்ரைன் நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்கி ஈரான் பதிலடி கொடுத்தது.

தெஹ்ரான்

ஈரான் மீது 2 நாட்களாக அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். 78 பேர் காயமடைந்து உள்ளனர்.

ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் நேற்று முன்தினம் வர்த்தக கப்பல்கள் மீது திடீரென்று ஈரான் தாக்குதல் நடத்தியது. இதுபற்றி ஈரானின் ஐ.ஆர்.ஐ.பி. என்ற அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு முன்பிருந்த சூழல் இன்னும் திரும்பவில்லை.

இந்த ஜலசந்தி வழியே செல்லக்கூடிய அனைத்து கப்பல்களும், ஈரான் அறிவித்த கடல் வழியிலேயே பயணிக்க வேண்டும். அப்படி இல்லையெனில், அந்த கப்பல்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படாது என்று தெரிவித்தது.

காலாவதியான ஒப்பந்தம்

ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் தாக்குதல்களை நிறுத்துவதற்காக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒரு வார கால ஒப்பந்தம் காலாவதியான நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்தது.

இந்த நிலையில், துருக்கியின் அங்காரா நகரில் நேட்டோ உச்சி மாநாடு நேற்று நடந்தது. இதில், நேட்டோ நாடுகள் கலந்து கொண்டுள்ளன. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்று பேசும்போது, ஈரானுடனான போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது என திடுக்கிடும் அறிவிப்பை வெளியிட்டார்.

அதிகரித்த போர் பதற்றம்

இதனால் அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்து உள்ளது. அவர் தொடர்ந்து கூறும்போது, ஈரானுடன் பேசி நேரம் வீணாக்க விரும்பவில்லை. ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் 3 கப்பல்களை தாக்கி ஈரான் அழித்து விட்டது என்று குற்றச்சாட்டாக கூறினார்.

அதற்கு முன்பு, தங்களுடைய ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி விட்டது என கூறி, குவைத் மற்றும் பஹ்ரைன் நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்கி ஈரான் பதிலடி கொடுத்தது.

ஈரான் சுகாதார அமைச்சகம்

இந்த நிலையில், ஈரானை கடுமையாக எச்சரிக்கும் வகையில் டிரம்ப் நேற்றிரவு பேசினார். அப்போது அவர், ஈரான் மிகவும் மோசமாக நடந்து கொள்கின்றது. நேற்று இரவு (5-ந்தேதி) ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்தினோம். இன்று இரவு (6-ந்தேதி) மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம். நிலைமை எப்படி அமைகிறது? என பார்ப்போம். ஈரான் கடந்த 47 ஆண்டுகளாக மக்களை கொன்று வருகிறது என்று கடுமையாக கூறினார்.

இந்த சூழலில், ஈரான் சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தியில், ஈரான் மீது 2 நாட்களாக அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். 78 பேர் காயமடைந்து உள்ளனர் என தெரிவித்தது. ஈரான் அரசு தரப்பில், சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் உசைன் கெர்மான்பூர் இதனை தெரிவித்து உள்ளார். இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட கூடிய சாத்தியமும் அதிகரித்து காணப்படுகிறது.