வெல்லிங்டன்,
கடல்வாழ் உயிரினங்களில் மிக பெரிய மீனினம் ஆக திமிங்கலங்கள் உள்ளன. இவை கடலில் ஓரிடத்தில் இருந்து தினமும் பல ஆயிர மைல்கள் நீந்தி கடந்து செல்லும்.
இந்த நிலையில் நியூசிலாந்தில் உள்ள ஸ்டூவர்ட் என்ற சிறிய தீவு ஒன்றில் 145 பைலட் வகை திமிங்கலங்கள் கரையோரம் ஒதுங்கியுள்ளன. இவற்றில் 50 சதவீதம் இறந்து விட்டன. ஆனால் மீதமுள்ளவற்றை காப்பாற்றுவது என்பது இயலாத ஒன்றாக உள்ளது.
திமிங்கலங்களின் நிலை, தொலைதூர கரை பகுதி, இடத்தினை சரியாக கண்டறிவது ஆகியவற்றில் உள்ள சங்கடங்களை அடுத்து அவற்றை கொல்வது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
நியூசிலாந்து கடற்கரையோர பகுதிகளில் திமிங்கலங்கள் ஒதுங்குவது அடிக்கடி நிகழும் சம்பவங்களாக உள்ளன. நேற்று வடக்கு தீவில் அமைந்த 90 மைல் பீச்சில் 10 குள்ள வகை கொலைகார திமிங்கலங்கள் ஒதுங்கின.
அவற்றில் 2 இறந்து விட்டன. மீதமுள்ளவற்றை மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்லும் முயற்சிகள் நாளை நடைபெற உள்ளன என கூறப்படுகிறது.
இதேபோன்று டவுட்புல் பே பகுதியருகே ஒதுங்கிய ஸ்பெர்ம் வகை திமிங்கலம் ஒன்று சனி கிழமை இரவு இறந்தது. மற்றொரு குள்ள வகை பெண் திமிங்கலம் ஒன்றும் இறந்துள்ளது.
திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் கரை ஒதுங்குவது பற்றி முழுமையாக தெரியவில்லை. எனினும், நோய் பாதிப்பு, புலம்பெயர்வதில் ஏற்படும் தவறு, புவியமைப்பு விசயங்கள், வேகமுடன் வீசும் அலை, துரத்தும் உயிரினத்திடம் இருந்து தப்பிப்பது அல்லது தீவிர பருவநிலை ஆகியவற்றால் இவை கரையோரம் ஒதுங்குகின்றன என கூறப்படுகிறது.