உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் 150 மாணவிகள் பலி; ஈரானில் பல்லாயிரக்கணக்கானோர் ஊர்வலம்

ஆண்கள், பெண்கள் என பல்வேறு தெருக்களிலும் நடந்த ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

மினாப்

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இந்த தாக்குதலின் ஒரு பகுதியாக தெற்கு ஈரானின் ஹார்மோஜ்கான் மாகாணத்தில் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளியின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் பலியாகி உள்ளனர். இதனை அரசு ஊடகங்கள் வெளியிட்டு உள்ள செய்தி உறுதிப்படுத்தி உள்ளது.

இதுதவிர பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது. இந்த தொடக்க கட்ட தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டு விட்டனர் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தகவல் தெரிவித்து உள்ளது.

இதில், மினாப் பெண்கள் பள்ளியில் நடந்த தாக்குதலில் 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் உயிரிழந்து உள்ளனர். 100 பேர் வரை காயமடைந்து உள்ளனர். உயிரிழந்த 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளுக்கான இறுதி ஊர்வலம் இன்று நடந்தது. பல்வேறு தெருக்களிலும் ஆண்கள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானோர் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்தும்படி இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன. ஐ.நா. அமைப்பும் கவலை தெரிவித்து உள்ளது. எனினும், போரானது தொடர்ந்து நடந்து வருகிறது.