உலக செய்திகள்

இன்று முதல் ஓமனில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி

ஓமன் சுகாதாரஅமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஓமன் நாட்டில் கொரோனா பாதிப்பை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. முன்னுரிமை அடிப்படையில் வயதானவர்களுக்கு மட்டும் இந்த தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தது.தற்போது இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இந்த தடுப்பூசியானது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் போடப்படுகிறது. அதன்படி, இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ள விரும்புபவர்கள் தடுப்பூசி போடும் மையங்களுக்கு செல்வதற்கு முன்னர் சுகாதார அமைச்சகத்தின் இணையத்தளத்தில் முன்பதிவு செய்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஓமன் நாட்டில் இதுவரை 11 லட்சத்து 81 ஆயிரத்து 953 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரத்து 725 பேர் இந்த தடுப்பூசியை போட்டுள்ளனர். இது 100-க்கு 23.1 பேர் என்ற விகிதத்தில் இருந்து வருகிறது. அடுத்த ஆண்டு(2022) பிப்ரவரி 19-ந் தேதிக்குள் ஓமன் நாட்டைச் சேர்ந்த 70 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டிருக்கும் நிலை ஏற்படும்.கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசு மேற்கொண்டுள்ள இந்த பணிகளுக்கு பொதுமக்கள் தேவையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT