தாக்குதல் நடந்த பகுதி 
உலக செய்திகள்

ஆஸ்திரியாவில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது சரமாரி கத்திக்குத்து: ஒருவர் பலி

தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள வாலிபர், சிரியாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

வியன்னா:

ஆஸ்திரியாவின் தெற்கு பகுதியில் உள்ள வில்லாச் நகரில் நேற்று சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது சுமார் 23 வயது நிரம்பிய வாலிபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளார். இதைப் பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். எனினும், அந்த வாலிபர் கத்தியால் குத்தியதில் 14 வயது நிரம்பிய சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். 4 பேர் பலத்த காயமடைந்தனர். பிரதான சதுக்கம் அருகே நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாக்குதல் நடத்தியதாக ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர், சிரியாவைச் சேர்ந்தவர் என்பதும், ஆஸ்திரியாவில் சட்டப்பூர்வமாக குடியேறியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வாலிபரின் தனிப்பட்ட பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் ரெய்னர் டியோனிசியோ கூறினார்.

கைது செய்யப்பட்ட நபர், தானாக இந்த தாக்குதலை நடத்தினாரா? அல்லது வேறு நபர்களின் தூண்டுதலால் இவ்வாறு செய்தாரா? என்பது தெரியவில்லை. வேறு நபர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிப்பதால் அந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.