புதுடெல்லி,
இந்தியாவை பொறுத்தவரை, உக்ரைனில் சிக்கியிருக்கும் சொந்த நாட்டு மக்களை மீட்பதுதான் உடனடி சவாலாக மாறியிருக்கிறது. மாணவர்கள் உள்பட சுமார் 16 ஆயிரம் இந்தியர்கள் உக்ரைனில் சிக்கியிருப்பதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது.
உக்ரைனின் வான்பகுதி பயணிகள் விமான போக்குவரத்துக்கு மூடப்பட்டது. அதேநேரம் உக்ரைன் வான்பகுதி மூடப்பட்டாலும், உக்ரைன்வாழ் இந்தியர்கள் ருமேனியா மற்றும் ஹங்கேரி எல்லைகளுக்கு அழைத்து வரப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் அந்தந்த நாடுகளின் தலைநகரான முறையே புகாரெஸ்ட் மற்றும் புதாபெஸ்டுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து ஆபரேஷன் கங்கா' திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.
உக்ரைனிலுள்ள இந்தியர்கள் போலந்து, ருமேனியா, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக் குடியரசு ஆகிய அண்டை நாடுகள் உடனான எல்லை வழியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அப்படி மீட்கப்படும் இந்திய குடிமக்களை வெளியேற்ற உதவுவதற்காக 24x7 கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த கட்டுப்பாட்டு மையங்களை தொடர்பு கொள்ள வசதியாக தொலைபேசி எண்களும், இ-மெயில் முகவரிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொள்ள 1800118797 என்ற எண்ணை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் குறித்து அறிய ஓப்கங்கா ஹெல்ப்லைன் டுவிட்டர் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிகிறது.