உலக செய்திகள்

மொசாட் அமைப்புடன் தொடர்புடைய 35 பேர் கைது; ஈரான் அறிவிப்பு

உளவு பார்த்தல், சட்டவிரோத கடத்தல், ஆயுதங்கள் கடத்தல் மற்றும் பிரிவினைவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தெஹ்ரான்

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக கடுமையான தாக்குதலை நடத்தின. தொடர்ந்து நடந்து வந்த தாக்குதல்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

இந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், 40 நாட்களாக நீடித்து வந்த பதற்றம் சற்று தணிந்தது. இதனையடுத்து, பாகிஸ்தானில் அமெரிக்கா, ஈரான் தரப்புக்கு இடையே நடந்த முதல்கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

எனினும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இந்த வாரத்தில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெற கூடும் என்று பாகிஸ்தானிலுள்ள ஈரான் தூதரக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஈரான் நாட்டில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 35 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என ஈரானின் அரசு ஊடக செய்தி தெரிவிக்கின்றது. அதில் உளவு பார்த்தல், சட்டவிரோத கடத்தல், ஆயுதங்கள் கடத்தல் மற்றும் பிரிவினைவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்களில் இஸ்ரேலின் உளவு பிரிவான மொசாட் அமைப்புடன் தொடர்புடைய நபர்களும் உள்ளனர் என கூறப்படுகிறது. நாட்டின் 6 மாகாணங்களில் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஈரானின் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்களில் அவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர் என ஊடக செய்தி தெரிவிக்கின்றது.