உலக செய்திகள்

அமெரிக்காவில் நடந்த துப்பாகிச்சூட்டில் 4 பேர் பலி

அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிட்ஸ்பர்க்,

அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் நகரில் டிரி ஆஃப் லைப் சைநாகோகேயில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானதாக அந்நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். யூத மக்களின் ஜெபக்கூடம் அருகே இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்தனர். துப்பாக்கி சூட்டில் 3 போலீஸ் அதிகாரிகள் மீதும் குண்டு பாய்ந்தது. இதையடுத்து, அந்த நபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். ஆனால் அவர் மேலும் 12 பேரை சுட்டதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.

துப்பாக்கிச்சூட்டிற்கான உறுதியான காரணம் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

இந்த துப்பாக்கிச்சுடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரங்கலை தெரிவித்ததுடன், அங்கு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த நாட்டு கவர்னர் டாம் உல்ஃப் தனது டுவிட்டர் பதிவில் துப்பாக்கிச்சூட்டிற்கு தனது கண்டனத்தையும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.