லாகூர்,
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இருந்து பெஷாவருக்கு இன்று பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் பெண்கள், குழந்தைகள் உள்பட 48 பேர் பயணம் மேற்கொண்டனர்.
கைபர் பக்துவா மாகாணம் டிரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 40 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பஸ்சின் பிரேக் செயலிழந்ததாலேயே விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.