உலக செய்திகள்

பப்புவா நியூ கினியாவில் 7.5 அளவில் பயங்கர நிலநடுக்கம் -சுனாமி எச்சரிக்கை

பப்புவா நியூ கினியாவில் 7.5 அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

கான்பெர்ரா,

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள தீவில் இன்று மாலை 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பப்புவா நியூ கினியா நெருப்பு வளையத்திற்குள் இருக்கும் நாடாகும். இங்கு பூகம்ப உருவாக்க பாறைகள் மற்றும் எரிமலைகள் இருப்பதால் அடிக்கடி பெரிய அளவில் பூகம்பங்கள் ஏற்படுகின்றன.

இந்நிலையில், பப்புவா நியூ கினியா நாட்டின் கோகோபோ என்ற நகரின் வடகிழக்கே சுமார் 45 கிலோமீட்டர் தூரத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் உருவானது. இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் பூகம்ப மையத்தின் 1000 கி.மீ சுற்றளவில் சுனாமி பேரலைகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் இதன் அருகில் உள்ள சாலமன் தீவு பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT