உலக செய்திகள்

இலங்கை: முதியோர் இல்லத்தில் நடந்த தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு - உரிமையாளர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியோர் இல்லத்தின் உரிமையாளரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கொழும்பு.

ஆதரவற்றோர் இல்லம்

இலங்கையின் மேற்கு மாகாணங்களில் ஒன்றாக களுத்துறை உள்ளது. இங்கு கொழும்பில் இருந்து தென்கிழக்கே 65 கி.மீ. தொலைவில் உள்ள அங்குருவாதொட்ட பகுதியில் அமைந்திருக்கும் 'மாவ்பிய செவன' என்ற தனியார் முதியோர் இல்லம் அமைந்துள்ளது. அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் 71 முதியோர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், நிர்வாகிகள் மற்றும் நர்சுகள் 10 பேர் என மொத்தம் 81 பேர் தங்கியிருந்தனர்.

கியாஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு

முதியோர் இல்லத்தில் இருந்த சமையல் அறையில் இரவு உணவுக்காக மாலையில் சமைக்கப்பட்டு கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சமையல் அறையில் இருந்து கியாஸ் சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் கண்இமைக்கும் நேரத்தில் சிலிண்டரில் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

தொடர்ந்து முதியோர் இல்லம் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. ஆதரவற்ற முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த அறைக்கு தீ வேகமாக பரவியது. தீ பரவியதை தொடர்ந்து அங்கு இருந்த நிர்வாகிகள் மற்றும் நர்சுகள் தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.

12 பேர் உயிரிழப்பு

அவர்களில் ஒருசிலர் முதியவர்களின் உயிரை காப்பாற்றும் எண்ணத்துடன் சக்கர நாற்காலியில் அவர்களை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் தீயின் கோர தாண்டவம் மற்றும் அதீத அனல் காரணமாக அவர்களை காப்பாற்ற முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்களில் வேகமாக விரைந்தனர்.

தொடர்ந்து முதியோர் இல்லத்தில் பரவியிருந்த தீயை தண்ணீரை கொண்டு பீய்ச்சியடித்து அணைக்க முயன்றனர். மறுபுறம் தீ விபத்தில் சிக்கிய 51முதியவர்களை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 10 முதியவர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மேலும் 2 முதியவர்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியோர் இல்லத்தின் உரிமையாளரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.