கான்பெரா,
கடல் வாழ் உயிரினங்களின் தாய்ப்பாசத்தை வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உயிரிழந்த தனது குட்டியை முதுகில் சுமந்தபடி கடலில் நீந்திச் செல்லும் ஒரு தாய் டால்பினின் காட்சி, உலகம் முழுவதும் இணையவாசிகளை உருக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள தாய் டால்பினுக்கு 'ப்ராகிள்' (Fragile) என்று பெயரிடப்பட்டுள்ளது. தனது குட்டியை இழந்த துயரத்தில் இருந்த அந்த டால்பின், உயிரிழந்த குட்டியை கடலில் மூழ்கவிடாமல் முதுகில் தாங்கியபடி பல நாட்கள் நீந்தியதாக கூறப்படுகிறது. குட்டி நீரில் சரியத் தொடங்கும் ஒவ்வொரு முறையும், அதை மீண்டும் மேலே தள்ளி சுமந்து செல்லும் காட்சிகள் பார்ப்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
இந்த காட்சிகளை ஆஸ்திரேலியாவின் கடல் ஆய்வு அமைப்பு ஒன்று பதிவு செய்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, பிறந்த குட்டி டால்பின் மிக வேகமாக சுவாசித்தது. இது, அந்தக் குட்டி நீண்ட நேரம் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்ததற்கான அறிகுறியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ப்ராகிள் இதற்கு முன்பும் தனது கடைசி நான்கு குட்டிகளையும் இழந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முறை பிறந்த குட்டியும் உயிரிழந்தது, அந்த தாய் டால்பினின் துயரத்தை மேலும் அதிகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். குளிர்காலத்தில் டால்பின்களின் குட்டிகள் உயிருடன் வளர்வது மிகவும் சவாலானதாக இருக்கும் என்றும் அந்த அமைப்பு விளக்கியுள்ளது.
கடல் உயிரினங்களை ஆய்வு செய்யும் நிபுணர்கள் கூறுகையில், டால்பின்கள் மிகவும் புத்திசாலித்தனமானவை மட்டுமல்லாமல், வலுவான சமூக உறவுகளையும் குடும்பப் பாசத்தையும் கொண்ட உயிரினங்களாகும். குறிப்பாக, தாய் டால்பின்கள் சில சமயங்களில் உயிரிழந்த குட்டியை உடனடியாகப் பிரிந்து செல்லாமல், பல மணி நேரங்கள் அல்லது சில நாட்கள் வரை சுமந்து செல்லும் நடத்தையை வெளிப்படுத்துவது அறிவியல் ஆய்வுகளில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள், "தாய்ப்பாசத்திற்கு எல்லையே இல்லை", "விலங்குகளுக்கும் மனிதர்களைப் போலவே ஆழமான உணர்வுகள் உள்ளன", "இந்த காட்சி மனதை கனக்கச் செய்கிறது" என தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
உயிரினங்களின் பாசமும் தாய்மையின் ஆழத்தையும் எடுத்துக்காட்டும் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளையும் பகிர்வுகளையும் பெற்று தொடர்ந்து வைரலாகி வருகிறது.