தெஹ்ரான்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில், தெஹ்ரான் நகரில் உள்ள இங்கிலாப் சதுக்கத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக பேரணி ஒன்று நடந்தது.
இதில், சிறுமிகள், இளம்பெண்கள் என பொதுமக்கள் பலர் திரண்டனர். அப்போது, ஈரானின் புதிய தலைவருடன் இணைந்து பணியாற்றுவோம் என அவர்கள் தெரிவித்ததுடன், நாட்டை பாதுகாக்க தயாராக இருக்கிறோம் என்று பேரணியில் கலந்து கொண்டவர்கள் கூறினர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக அவர்கள் கோஷமும் எழுப்பினர். ஈரானில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் சூழலில், அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த பேரணி நடந்துள்ளது.
இந்த சூழலில், அமெரிக்க அதிகாரிகள், கட்டமைப்புகள் மற்றும் நலன்களுக்கு எதிராக திட்டமிட்டு, உத்தரவு பிறப்பித்து, தாக்குதல்களை நடத்த இருந்த ஈரானை சேர்ந்த 7 முக்கிய தளபதிகளுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று தடைகளை விதித்து உத்தரவிட்டார்.
அவர்கள் ஈராக்கில் இருந்தபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவர்களில் 4 பேர் சிறப்பாக அறிவிக்கப்பட்ட உலகளாவிய பயங்கரவாதிகள் என்றும் கூறப்படுகிறது. இவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும், ஈராக்கின் ஸ்திர தன்மையை பாதிக்க கூடிய அவர்களையும், அந்த குழுக்களையும் தடுக்க வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தினார்.