பாங்காக்
தாய்லாந்தில் ஏறக்குறைய கிரிக்கெட் விளையாட்டில் ரன் எடுக்க ஓடக்கூடிய ஓடுதளம் அளவிலான 65 அடி நீளம் கொண்ட டைனோசர் இனம் கண்டறியப்பட்டு உள்ளது.
பூமியில் பழங்காலத்தில் உலா வந்த உருவில் பெரிய விலங்குகளின் புதைபடிவங்கள் பொக்கிஷங்களாக பார்க்கப்படுகின்றன. இவற்றால், அந்த காலத்தில் வாழ்ந்த விலங்கு இனங்கள் மற்றும் என்ன வகையான உயிரினங்கள்? அந்த காலத்தில் வாழ்ந்தன என்றும் சுற்றுச்சூழலியலில் அவை ஏற்படுத்திய தாக்கங்களை பற்றியும் நாம் அறிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில், தற்போது தாய்லாந்து நாட்டில் இதுவரை இல்லாத புதிய வகை புதைபடிவம் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். தாய்லாந்து நாட்டின் கலாசின் மாகாணத்தில் பூ நொய் என்ற பகுதியில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செடி, கொடிகளை உண்டு வாழக்கூடிய தாவர உண்ணி வகையை சேர்ந்த டைனோசர் இனத்தின் புதைபடிவங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. 2008-ம் ஆண்டு முதல் இந்த பகுதியில் ஆய்வுகள் நடந்தன.
அப்போது, கிடைத்த புதைபடிவங்கள், முதலில் மிகப்பெரிய பாம்பு ஒன்றின் பாகங்கள் என அறியப்பட்டன. ஆனால், பின்னரே அது டைனோசரின் பாகங்கள் என உறுதிப்படுத்தப்பட்டன. இதுபற்றி மகாசரகம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான டாக்டர் அபிராத் நீல்பனபான் கூறும்போது, 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட புதைபடிவங்கள் கண்டறியப்பட்டதில், அவை டைனோசரின் பற்கள் மற்றும் எலும்புகள் என தெரிய வந்ததுடன், வரலாற்று காலத்துக்கு முந்தைய விலங்குகளின் மீதங்களும் கிடைத்துள்ளன.
இவற்றில் உராகசாரஸ் கலாசிநென்சிஸ் என்ற புதிய வகை டைனோசர் இனத்தின் புதைபடிவம் கண்டறியப்பட்டு உள்ளது. அதன் கழுத்து 65 அடி நீளம் கொண்டது. எளிதில், இருந்த இடத்தில் இருந்தபடியே, அதிக உயரத்தில் உள்ள மரங்களின் கிளைகளை உண்பதற்கு உதவியாக அது உள்ளது.
இந்த கழுத்து, மொத்த உடல் நீளத்தில் பாதியை கொண்டுள்ளது. பொதுவாக 13 முதல் 15 கழுத்து எலும்புகள் கொண்ட இதுபோன்ற டைனோசர் வகைக்கு மத்தியில், இதன் 17 மற்றும் 19 ஆகிய கழுத்து எலும்பு பகுதிகளின் புதை படிவங்கள் கிடைத்துள்ள சூழலால், இது ஒரு புது வகை டைனோசராக அறியப்படுகிறது.
இந்த டைனோசரின் எலும்புகள் ஒய் வடிவில் காணப்படுகின்றன. இது, மற்ற டைனோசர் இனத்தில் இருந்து அவை மாறுபடுவதற்கான காரணியாக உள்ளது. மற்றவற்றில் இருந்து தனித்துவத்துடன் இவை உள்ளன என ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்துகின்றனர்.
ஏறக்குறைய கிரிக்கெட் விளையாட்டில் ரன் எடுக்க ஓடக்கூடிய ஓடுதளம் அளவில் 65 அடி நீளம் கொண்டுள்ளது. இதன்படி, மேமன்சிசாரித் வகையை சேர்ந்த தனித்துவம் வாய்ந்த புதிய வகை டைனோசர் புதைபடிவங்கள் தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. ஜுராசிக் காலத்தின் கடைசி காலகட்டத்தில் அவை வாழ்ந்திருக்க கூடும் என கூறப்படுகிறது.
இதற்கு முன்பு சீனாவில் இந்த வகை இனங்கள் கண்டறியப்பட்டன. இவை தென்கிழக்கு ஆசியாவிலும் இருந்தன என கூறப்படுகிறது. ஆனால், ஒரு சில புதைபடிவங்களே கிடைத்துள்ளன. இதுவரை தாய்லாந்தில் இந்த இனம் இருந்ததற்கான முறைப்படியான தகவல் கிடைக்கப்பெறவில்லை. தாய்லாந்தில் கண்டறியப்பட்டது இதுவே முதன்முறையாகும்.
இதனால், கிழக்காசியாவை கடந்தும் இந்த இனங்கள் பரவியுள்ளன என தெரிய வந்துள்ளது. இதற்கு முன்பு, தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய டைனோசர் இனத்தின் புதைபடிவங்கள், கடந்த மே மாதத்தில் தாய்லாந்தில் கண்டறியப்பட்டன. அதன் எலும்புகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குளத்தின் கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
இதன் ஆய்வு முடிவில், இந்த இன டைனோசர்கள் 27 டன்கள் (1 டன் என்பது ஆயிரம் கிலோ) எடை இருந்துள்ளன. இதன்படி, மொத்தம் 27 மீட்டர்கள் நீளம் கொண்ட அவை, 9 ஆசிய யானைகளின் எடைக்கு சமம் ஆகும். அந்த டைனோசரின் ஒரு முன்னங்கால் 1.78 மீட்டர் நீளம் கொண்டிருந்தது (மனிதனை விட பெரியது).
அதற்கு நாகாடைட்டன் என பெயரிடப்பட்டு உள்ளது. தாய்லாந்தில் பெயரிடப்பட்ட 14-வது டைனோசர் இதுவாகும். அவை, 100 முதல் 120 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்துள்ளன. அதன் பெரிய அளவிலான முழு வடிவையும் மறுகட்டமைப்பு செய்து, பாங்காக் நகரில் உள்ள மியூசியத்தில் வைத்துள்ளனர்.
இந்த சூழலில், 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, தனித்துவம் வாய்ந்த டைனோசர் இனம் தாய்லாந்து நாட்டில் கண்டறியப்பட்டு உள்ளது. தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.