அபுதாபி,
கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக அபுதாபியில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அபுதாபி அவசரம், நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை கமிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அமீரகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு மற்றும் உலகெங்கும் ஒமைக்ரான் பரவல் காரணமாக சுகாதார முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக அபுதாபி முழுவதும் கீழ்க்கண்ட விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* அபுதாபி நகரில் உள்ளரங்கு மற்றும் திறந்தவெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் அறிவிக்கப்படுகிறது. அதன்படி அபுதாபியில் நடைபெறும் சமூக நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகள், இறுதிச்சடங்கு உள்ளிட்டவைகளில் கலந்துகொள்ள அதிகபட்சமாக 60 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
* உள்ளரங்கு நிகழ்ச்சிகளில் அதிகப்பட்சமாக 50 பேர் மட்டும் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல திறந்தவெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அதிகப்பட்சமாக 150 பேர் கலந்துகொள்ளலாம்.
* சமூக நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது. பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்கள் கட்டாயம் அல் ஹொசன் செயலியில் ஒளிரும் கிரீன் பாசை காண்பித்து உள்ளே செல்ல வேண்டும்.
* அதேபோல கிரீன் பாஸ் இல்லாதவர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளை கையில் எடுத்து செல்ல வேண்டும்.
* அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து அனைத்து நிகழ்ச்சிகளும் அதிகாரிகளால் கண்காணிக்கப்படும். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்யப்படும்.
* குறிப்பாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாய் மற்றும் மூக்கு பகுதிகளை மூடும் வகையில் முக கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.