துபாய்,
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நவீன போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, துபாய்யில் புதிய ‘ஏர் டாக்சி’ நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே சுமார் 3,100 சதுர மீட்டர் பரப்பளவில், நான்கு அடுக்குகளுடன் இந்த நிலையம் கட்டப்பட்டுள்ளது.
‘வெர்டிப்போர்ட்’ என அழைக்கப்படும் இந்த அமைப்பில், செங்குத்து தரையிறக்கம் மற்றும் புறப்படும் வசதி, விரைவு சார்ஜிங் உட்கட்டமைப்பு, இரண்டு அடுக்கு கார் பார்க்கிங், குளிரூட்டப்பட்ட பயணியர் ஓய்வறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. பாம் ஜூமேரா வரை உள்ள 36 கிலோமீட்டர் தூரத்தை சாலை வழியாக கடக்க 45 நிமிடங்கள் ஆகும் நிலையில் ‘ஏர் டாக்சி’ மூலம் வெறும் 10 நிமிடங்களில் சென்றடைய முடியும்.
இந்த சேவையை மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்ய முடியும். ஆரம்ப கட்டமாக விமான நிலையங்கள், ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் மற்றும் வணிக மையங்களுக்கு இடையே சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனை திட்டத்தை, துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த 'ஏர் டாக்சி' இந்த ஆண்டின் இறுதிக்குள் வணிக ரீதியான சேவையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.