லண்டன்,
இங்கிலாந்தில் ரோச்டேல் பகுதியருகே லிட்டில் பாரோ என்ற இடத்தில் சிறிய ரக சிர்ரஸ் எஸ்.ஆர். 20 ரக விமானம் ஒன்று திடீரென விபத்தில் சிக்கியது. இதில் அந்த விமானம் விளைநிலத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில், அதில் இருந்த 2 பேரும் சிக்கி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பற்றி கிரேட்டர் மான்செஸ்டர் போலீசார் கூறும்போது, விபத்து பகுதிக்கு விமான விபத்து புலனாய்வு கிளையின் குழுவினர் சென்றுள்ளனர். அந்த பகுதியை தங்களுடைய கட்டுக்குள் கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர் என தெரிவித்தனர். போலீசாரும், ஹெலிகாப்டர்களும், ஆம்புலன்சுகளும் சம்பவ பகுதியில் குவிந்திருந்தனர்.
விமானத்தில் மஞ்சள் நிற பாராசூட் இருந்துள்ளது. விபத்து பகுதியில் அது ஓரிடத்தில் கிடந்துள்ளது. இதனால், பாராசூட் சரியாக வேலை செய்யவில்லையா? என்ற விவரம் தெரிய வரவில்லை. விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். விமானத்தில் வேறு யாரும் இல்லை. தரையில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.