உலக செய்திகள்

‘36 ரபேல் விமானங்கள் ஏப்ரல் மாதத்துக்குள் வழங்கப்படும்’ - பிரான்ஸ் நாட்டு தூதர் அறிவிப்பு

இந்தியாவும் பிரான்சும் நாட்டின் பாதுகாப்பு விஷயங்களில் ஒன்று சேர்ந்து செயல்பட்டு வருவதாக பிரான்ஸ் நாட்டின் தூதர் இம்மானுவேல் லென்னேய்ன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய்ய இந்திய அரசு பிரான்ஸ் நிறுவனத்துடன் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதன்படி 2022 ஆம் ஆண்டுக்குள் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 விமானங்களை இந்தியாவிற்கு கொண்டுவர ஒப்பந்தம் செய்யப்பட்டது.

பிரான்ஸ் நிறுவனம் இதுவரை 30 விமானங்களை வழங்கி உள்ளது. மீதமுள்ள 36 விமானங்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் வழங்கப்படும் என்று இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டு தூதர் இம்மானுவேல் லென்னேய்ன் தெரிவித்தார். ரபேல் ஜெட் போர் விமானங்கள் குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது,

நாங்கள் குறித்த நேரத்தில் ரபேல் விமானங்களை அளித்துள்ளோம். இதுவரை 30 விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 36 விமானங்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் வழங்கப்படும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றுக்கு இருந்த போதிலும், சரியான நேரத்தில் விமானங்களை அளித்துள்ளோம். இதற்காக, பிரான்ஸ் நாட்டு குழுக்கள் இரவு பகலாக உழைத்து கொடுத்த வாக்கை காப்பாற்றி உள்ளது. இது எங்களுக்கு பெருமையான விஷயம் ஆகும்.

இந்தியாவும் பிரான்சும் நாட்டின் பாதுகாப்பு விஷயங்களில் ஒன்று சேர்ந்து செயல்பட்டு வருகின்றன. நாங்கள் இந்தியாவின் அண்டை நாடு போல செயல்பட்டு வருகிறோம்.

ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க நாங்கள் ஆதரவாக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஆக்கஸ் ஒப்பந்தம் குறித்து பேசுகையில், அதிர்ச்சியாகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும் உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார்.

ஆக்கஸ் ஒப்பந்தத்தின் படி ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் அணுஆயுத நீர்மூழ்கி கப்பல்களை வாங்கிக்கொள்ள வழிவகை செய்யும். இதன் காரணமாக, பிரான்ஸ் நாட்டுடன் செய்யப்பட்ட முந்தைய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது