உலக செய்திகள்

அமேசான் மழைக்காடு பாதுகாப்பு ஆர்வலர் கொலை: 4 பேருக்கு கடுமையான சிறை தண்டனை

தீர்ப்பு வழங்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பு மற்றொரு பழங்குடியின தலைவரான அமெரிக்கோ பஸ்குவாலா தொமிஷா சுட்டு கொல்லப்பட்டார்.

லிமா

அமேசான் மழைக்காடு பாதுகாப்பு ஆர்வலர் கொலை வழக்கில் 4 பேருக்கு கடுமையான சிறை தண்டனை அளிக்கப்பட்டது.

பெரு நாட்டின் அமேசான் மழைக்காடுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மரக்கடத்தல், போதைப்பொருள் கடத்தல், சுரங்கம் மற்றும் நில அபகரிப்பு உள்ளிட்ட செயல்கள் நடந்து வருகின்றன என அந்த பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் குற்றச்சாட்டாக கூறி வருவதுடன், அவற்றிற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பழங்குடியின தலைவர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலரான குவிண்டோ இனுமா அல்வராடோ என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் இவற்றிற்கு எதிராக போராடி வருகிறார். தனக்கு அச்சுறுத்தல் உள்ளது என அதிகாரிகளிடம் கூறி வந்த நிலையில், கடந்த 2023-ம் ஆண்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

துப்பாக்கி சூடு

சட்டவிரோத மரக்கடத்தலுக்கு எதிரான போராட்டத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டார். அவர் மீது துப்பாக்கி சூடு நடந்தபோது, உடன் சென்ற பெண் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. இந்த வழக்கில் பெரு நாட்டு கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்தது. இதன்படி, கொலையாளிகள் ஜெனிக்ஸ் சபோயா மற்றும் லிம்பர் ரியோஸ் ரூயிஸ் ஆகிய இருவருக்கு தலா 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கொலை செய்வதற்கு திட்டமிட்டு, பின்புலத்தில் இருந்து செயல்பட்ட முக்கிய குற்றவாளியான மர வியாபாரி வில்லலோபோஸுக்கு 28 ஆண்டுகள் 4 மாதங்களும், அவருடைய கூட்டாளி ஜெர்லி சபோயாவுக்கு 15 ஆண்டுகளும் சிறைத்தண்டனை வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.

மற்றொரு கொலை

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.1.8 கோடி இழப்பீடு வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. பழங்குடியின பாதுகாவலர் கொலை வழக்கில் பெரு நாட்டில் இவ்வளவு கடுமையான தண்டனை வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இதனால், சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் தொடர்புடைய பிற வழக்குகளில் இந்த நீண்டகால சிறை தண்டனையானது, ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக இருக்கும். எனினும், இந்த தீர்ப்பு வழங்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பு மற்றொரு பழங்குடியின தலைவரான அமெரிக்கோ பஸ்குவாலா தொமிஷா (வயது 57) என்பவர் சுட்டு கொல்லப்பட்டார். மரங்களில் இருந்து எண்ணெய் பிரித்தெடுக்கும் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித் தொமிஷாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்ம நபர்கள் சுட்டு கொன்று விட்டு தப்பியுள்ளனர்.