தெஹ்ரான்,
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்தனர். இதையடுத்து, அமெரிக்கா, ஈரான் இடையே போர் மூண்டது. மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. பின்னர், பேச்சுவார்த்தை மூலம் இரு தரப்பு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், உலகின் முக்கிய வர்த்தக பாதையாக திகழும் ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்தது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்தது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை கடக்கும் சரக்கு, கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
அந்த வகையில், ஹர்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற சைப்ரஸ் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது ஈரான் இன்று தாக்குதல் நடத்தியது. அனுமதிக்கப்பட்ட பாதையில் சரக்கு கப்பல் செல்லாமல் மாற்று பாதையில் சென்றதால் தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் கப்பலில் பயணித்த 11 இந்திய மாலுமிகளில் 10 பேர் மீட்கப்பட்டனர். ஆனால், மாயமான ஒரு இந்தியரின் நிலை என்ன ஆனது? என்று தெரியவில்லை.
அதேவேளை, தாக்குதலை தொடர்ந்து ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்தது. ஹர்முஸ் ஜலசந்தி வழியாக எந்த கப்பல் செல்லவும் அனுமதி கிடையாது என்றும் ஈரான் அறிவித்தது.
இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்த சில மணிநேரங்களில் அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
ஈரானின் தெற்கே உள்ள துறைமுக நகரங்களான பண்டர் அப்பாஸ், சிரிக், சாம்பஹார், பண்டர் இ டெர், ஜஸ்க், அசுல்யா ஆகிய நகரங்களில் உள்ள ஈரான் ராணுவ கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. 140 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.