லாகூர்,
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த சூழலில், அதன்மீது வருகிற 3ந்தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் இம்ரான்கான் அரசு கவிழும்.
இந்த நிலையில் அந்நாட்டு மக்களிடையே கான் உரையாற்றினார். அவர் இன்று பேசும்போது, நான் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடியபோது, இந்த உலகமும், என்னுடன் கிரிக்கெட் விளையாடியவர்களும் நான் கடைசி பந்து வரை விளையாடிய நிகழ்வை பார்த்துள்ளனர். என் வாழ்வில் நான் ஒருபோதும் தோல்வியை ஏற்று கொண்டதில்லை.
நான் வீட்டில் முடங்கி விடுவேன் என ஒருவரும் நினைத்து விட கூடாது. முடிவு என்னவாயினும், நான் திரும்பவும் வலிமையுடன் வருவேன் என கூறியுள்ளார்.
இந்த பேச்சின்போது கான், வெளிநாடு ஒன்று எங்களுக்கு (பாகிஸ்தான்) செய்தி ஒன்றை அனுப்பியது. அதில், கான் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். இல்லையெனில், அந்நாடு அதிகம் பாதிக்கப்படும் என தெரிவித்து இருந்தது என கூறினார்.
எனினும், தொடக்கத்தில் அமெரிக்கா என நாட்டின் பெயரை குறிப்பிட்ட கான் அதன்பின்பு, வெளிநாடு ஒன்று அச்சுறுத்தல் செய்தியை விடுத்தது என கூறினார். மார்ச் 8ந்தேதி அல்லது மார்ச் 7ந்தேதிக்கு முன்பு, அமெரிக்கா எங்களுக்கு அனுப்பிய... என கூறி நிறுத்தி பின்னர், அமெரிக்கா அல்ல. ஒரு வெளிநாடு எங்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பியது.
இதனை பற்றி நான் ஏன் பேசுகிறேன் என்றால்... ஒரு சுதந்திர நாடு இதுபோன்ற செய்தியை பெறுகிறது... இது எனக்கு எதிரானது மற்றும் நாட்டுக்கும் கூட என கூறியுள்ளார். அந்த செய்தி எனக்கு எதிரானது. அரசுக்கு எதிரானது அல்ல என்றும் கான் கூறியுள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறினால், பாகிஸ்தான் மன்னிக்கப்படும். இல்லையெனில் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அதில் கூறப்பட்டது என அவர் தெரிவித்து உள்ளார்.