மாஸ்கோ
அமெரிக்க உளவு பிரிவு இயக்குநர் ஜான் ராட்கிளிப் ரஷியாவுக்கு தனி விமானத்தில் சென்றுள்ளார்.
அமெரிக்காவின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் அமைப்பாக சி.ஐ.ஏ. எனப்படும் மத்திய புலனாய்வு முகமை உள்ளது. இதன் இயக்குநர் ஜான் ராட்கிளிப் எந்த வித அறிவிப்பும் இன்றி தனி விமானத்தில் ரஷியாவுக்கு சென்றுள்ளார்.
இதன்படி, அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள ஆண்ட்ரூஸ் கூட்டு ராணுவ தளத்தில் இருந்து புறப்பட்டு, ரஷியாவின் மாஸ்கோ நகரில் உள்ள நுகோவோ சர்வதேச விமான நிலையத்தில், அமெரிக்காவின் போயிங் சி-17 குளோப்மாஸ்டர் 3 ராணுவ போக்குவரத்து விமானம் நேற்று தரையிறங்கியது.
உலக பொருளாதாரத்தில் இருந்து ஈரானை துண்டிக்கும் வகையிலான புதிய பிரசாரத்திற்கான திட்டம் ஒன்றை, அமெரிக்க கஜானா மந்திரி ஸ்காட் பெசன்ட் சமீபத்தில் வெளியிட்டார். ஈரானின் முக்கிய வர்த்தக பங்குதாரராக ரஷியா உள்ளது.
அந்நாட்டுடன் ரஷியா வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில், இதுபோன்ற நாடுகளை இலக்காக கொண்டு அமெரிக்கா செயல்பட திட்டமிட்டு உள்ளது. ஈரானை தன் வழிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஒன்றாக இந்த பிரசார திட்டம் செயல்படுத்தப்படும்.
அந்த வகையில், சி.ஐ.ஏ. இயக்குநர் ஜானின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. அடுத்த சில ஆண்டுகளில் நேட்டோவின் ஒற்றுமையை பரிசோதித்து பார்க்கும் வகையில், அதன் உறுப்பு நாடுகள் ஒன்றின் மீது சிறிய அளவில் தாக்குதல் நடத்த ரஷிய அதிபர் புதின் திட்டமிட்டு உள்ளார்.
இந்த ரகசிய தகவலை அமெரிக்க உளவு அமைப்பு கண்டறிந்துள்ளது. இதன்படி, அந்த தாக்குதல்கள் சைபர் தாக்குதல் முதல் சிறிய ராணுவ தாக்குதல் வரை இருக்க கூடும் என கூறப்படுகிறது. இதனை முன்னிட்டும், ஜானின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த பயணத்தில் ரஷியாவின் முக்கிய அதிகாரிகளை ஜான் நேரில் சந்தித்து பேச இருக்கிறார்.