உலக செய்திகள்

அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை - அதிர்ச்சி சம்பவம்

துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாஷிங்டன்,

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டம் பெகொவால் கிராமத்தை சேர்ந்த இளைஞர் குர்தீப் சிங் (வயது 28). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்குமேல் அமெரிக்காவில் வசித்து வந்தார். நியூயார்க்கில் வசித்து வந்த இவர் உணவு டெலிவரி வேலையும் பகுதி நேரமாக செய்து வந்தார்.

துப்பாக்கி சூடு - இந்தியர் உயிரிழப்பு

இந்நிலையில், குர்தீப் சிங் நேற்று முன் தினம் நியூயார்க்கில் பீட்சா மற்றும் உணவு டெலிவரி செய்ய தனது பைக்கில் சென்றுள்ளார். அப்போது, நியூயார்க்கின் ரிட்ச்மவுண்ட் தெரு பகுதியில் சென்றபோது குர்தீப் சிங்கை பைக்கில் வந்த மர்ம நபர் இடைமறித்துள்ளார். பின்னர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் குர்தீப் சிங்கை சுட்ட அந்த நபர் அங்கிருந்து தப்பிச்சென்றார். இந்த துப்பாக்கி சூட்டில் குர்தீப் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த துப்பாக்கி சூடு குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று குர்தீப் சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேவேளை, உயிரிழந்த குர்தீப் சிங்கின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு குர்தீப்பின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.