உலக செய்திகள்

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் - அமெரிக்கா

ஜம்மு-காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் முடிவு, முற்றிலும் அதன் உள்நாட்டு விவகாரம் என்று கூறியுள்ள அமெரிக்கா, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அமைதி காக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

வாஷிங்டன்

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மோர்கன் ஓர்ட்டகஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. ஜம்மு-காஷ்மீருக்கு அரசமைப்பு சட்டம் வழங்கும் சிறப்பு அந்தஸ்து ரத்து, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது என்ற இந்தியாவின் அறிவிப்பை கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அதேசமயம், இந்த நடவடிக்கைகள் முற்றிலும் உள்நாட்டு விவகாரம் என இந்தியா குறிப்பிட்டு உள்ளது. இருப்பினும் தடுப்புக்காவல்கள் தொடர்பான தகவல் கவலை அளிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம், பாகிஸ்தானுக்கு மறைமுகமாக அறிவுறுத்தும் வகையில், எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டில் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்புகளும் அமைதி காக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.