இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகருக்கு அருகே உள்ள கோஹாட் காவல்படை வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப் படை தாக்குதலில் 5 காவலர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் காவல் துறை தலைவர் ஜுல்பிகர் ஹமீத்,
கோஹாட் காவல் படை வளாகத்தில் உள்ள மசூதி ஒன்றில் தற்கொலைப் படை தாக்குதல் நிகழ்ந்தது. வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று கட்டிடத்தின் மீது மோதியதாக ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்கொலைப் படை தாக்குதல் நிகழ்ந்த பிறகு அந்த அமைப்பைச் சேர்ந்த ஏழு பயங்கரவாதிகள் காவல் படை வளாகத்துக்குள் ஊடுருவி துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் இதுவரை தற்கொலைப் படையாக செயல்பட்டு தாக்குதல் நடத்தியவர் உட்பட 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகள் முழுமையாக ஒழிக்கப்படும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.