கெய்ரோ,
எகிப்து நாட்டில் சிறுபான்மையினராக உள்ள கிறிஸ்தவர்கள், சமீப காலமாக தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த மாதம் 9-ந்தேதி அங்கு டாண்டா, அலெக்சாண்டிரியா நகரங்களில் தேவாலயங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 46 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், நேற்று அங்கு தலைநகர் கெய்ரோவில் இருந்து 250 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள புனித அன்பா சாமுவேல் மடத்துக்கு ஒரு பஸ்சில் கிறிஸ்தவர்கள் சென்று கொண்டிருந்தனர். அந்த பஸ்சை துப்பாக்கி ஏந்திய நபர்கள் வழிமறித்தனர். பஸ் நின்றவுடன் அதில் பயணம் செய்தவர்களை குருவிகளை சுடுவதுபோல சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். ரத்த வெள்ளத்தில் பலரும் சாய்ந்தனர்.
பதற வைக்கும் இந்த சம்பவத்தில் 26 பேர் குண்டுபாய்ந்து உயிரிழந்தனர். 26 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம், அந்த பகுதியில் சிறுபான்மையினர் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.