உலக செய்திகள்

பிலிப்பைன்சில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

கட்டிட இடிபாடுகளை மீட்கும் அணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

மணிலா,

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.07 மணியளவில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம்

மின் டோனா பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. பூமிக்கு அடியில் சுமார் 35 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மனியின் புவி அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தநிலநடுக்கத்தால் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பல கட்டிடங்கள் குலுங்கியது. இதனால் பீதி அடைந்த பொதுமக்கள், அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதியில் உள்ள வீடுகள், அலுவலகம் மற்றும் வணிக கட்டிடங்களில் இருந்த தொலைக்காட்சி, நாற்காலி, மேஜை உள்ளிட்ட பொருட்கள் சரிந்து விழுந்தது.

முதல் நிலநடுக்கத்தை தொடர்ந்து அதிகாலை 5.18 மணியளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. அதன்பிறகு காலை 6.25 மணியளவில் 3-வதாக ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானது.

மக்கள் அச்சம்

அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கங்களால் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் கடும் அச்சம் அடைந்தனர். நிலநடுக்கம் காரணமாக வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல் மளமளவென சரிந்து விழுந்தது. இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி மனதை பதைபதைக்க வைக்கின்றன.

நிலநடுக்கத்தினால் 12 பேர் பலியாகி உள்ளதாகவும் 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருப்பதாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில் நிலநடுக்கம் மற்றும் நிலசரிவால் பலியானோர் எண்ணிக்கை 32 தாண்டி உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிடங்களில் சிக்கி மேலும் சில பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 37 சதவீத கட்டிடங்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. இதனையடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் மின்சாரம்,தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது கட்டிட இடிபாடுகளை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.