கீவ்
உக்ரைனில் வர்த்தக கப்பல் மீது நடந்த தாக்குதலில் 4 இந்தியர்கள் பலியாகி உள்ளனர்.
நேட்டோவில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு ரஷியா போர் தொடுத்தது. உக்ரைனும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இரு நாடுகளின் மோதல் 5-வது ஆண்டாக தொடர்ந்து வருகிறது.
இந்த சூழலில், ரஷியா மீது உக்ரைன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் நடத்திய டிரோன்கள் தாக்குதல்களில் 7 பேர் பலியானார்கள். 50 பேர் காயம் அடைந்துள்ளனர். ரஷியாவின் முக்கிய ஆயுத உள்கட்டமைப்புகள் மீது டிரோன்களை கொண்டு உக்ரைன் தாக்குதலில் ஈடுபட்டது. எண்ணெய் நிறுவனம் ஒன்றும் தாக்குதலுக்கு இலக்கானது.
நீண்டதூர இலக்குகளை தாக்கி அழிக்கும் டிரோன்கள் இந்த தாக்குதல்களில் ஈடுபட்டன. இந்த சூழலில், பதிலடியாக உக்ரைனின் கீவ் நகர் மீது நேற்று முன்தினம் நள்ளிரவு, பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை கொண்டு ரஷியா தாக்குதல் நடத்தியது.
இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். 16 பேர் காயம் அடைந்தனர். இரவு 1.30 மணியளவில் தொடங்கி, நேற்று அதிகாலை வரை பல மணிநேரம் நடந்த இந்த தாக்குதலின் வெடிச்சத்தம் தலைநகரம் முழுவதும் எதிரொலித்தது.
இந்த நிலையில், உக்ரைனின் ஒடேசா நகரில் உள்ள துறைமுகத்தில் இருந்து வர்த்தக கப்பல் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது அந்த கப்பல் மீது ரஷியா திடீரென்று 3 நவீன ரக ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது.
கோல்டன் லியோ என்ற பெயருடைய, கினியா நாட்டு கொடியுடன் சென்ற அந்த கப்பலில் இருந்த 4 இந்தியர்கள், ஏவுகணை தாக்குதலில் பலியாகி உள்ளனர். தவிர ஒருவர் காயமடைந்து உள்ளார். அவர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வர்த்தக கப்பலை தாக்குவது, அப்பாவி ஊழியர்களை தாக்குவது அல்லது சுதந்திர முறையிலான கப்பல் இயக்கம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை முடக்குவது என்பது கண்டனத்திற்குரியது. இது தவிர்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.