உலக செய்திகள்

நேபாளத்தின் சிமிகோட் பகுதியில் மோசமடைந்த வானிலையால் 200 யாத்ரீகர்கள் சிக்கி தவிப்பு

நேபாளத்தின் சிமிகோட் பகுதியில் வானிலை மோசமடைந்த நிலையில் புனித யாத்திரை சென்ற 200 பேர் சிக்கி தவித்து வருகின்றனர்.

சிமிகோட்,

நேபாளத்திற்கு கைலாச புனித யாத்திரை சென்றவர்களில் 200 பேர் சிமிகோட் பகுதியில் ஏற்பட்ட வானிலை பாதிப்பினை அடுத்து அங்குள்ள மலை பகுதிகளில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.

அவர்களுடன் நேபாளத்திலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருந்து வருகின்றனர். அவர்களின் குடும்பத்தினருடமும் தொடர்பில் உள்ளனர். சிமிகோட் பகுதியில் 500 யாத்ரீகர்கள் தங்குவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளன.

அவர்களுக்கு ஆரம்பகட்ட மருத்துவ பரிசோதனை செய்வதற்கான வசதிகளும் அங்கு உள்ளன. அதனால் சிக்கியுள்ள 200 பேர் பற்றி அச்சப்பட தேவையில்லை. அவர்கள் அனைவரையும் வானிலை சீரடைந்த பின்னர் விமானங்களை அனுப்பி பாதுகாப்புடன் மீட்டு வருவோம் என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.