வாஷிங்டன்,
அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக கூறி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. தலைநகர் டெஹ்ரானை குறிவைத்து நடத்திய இந்த தாக்குதலில் ஈரானின் உச்சப்பட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உள்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
இதனை தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதனுடன் நட்புக் கொண்டுள்ள கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் ராணுவம் போர் அறிவித்து தாக்குதல் நடத்தி வருகிறது. வளைகுடா பிராந்தியம் முழுவதும் 2 வாரத்துக்கும் மேலாக பெரும் பதற்றத்தில் ஆழ்த்தி இருக்கும் ஈரான் போர் தற்போதைக்கு ஓய்வதற்கான அறிகுறி எதையும் வெளியிடவில்லை. மாறாக நாளுக்கு நாள் தீவிரமடையும் நிலையையே காட்டுகிறது.
இந்த நிலையில், ஈரானுடன் போரிடும் அமெரிக்காவுக்கு ஆயுத ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக சுவிட்சர்லாந்து அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் நடுநிலை கொள்கையின் படி, ஆயுத மோதலில் ஈடுபட்டு வரும் நாடுகளுக்கு, மோதல் முடியும் வரை ஆயுத ஏற்றுமதி செய்யப்படாது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.