இஸ்லாமபாத்,
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மே 7ம் தேதி இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.
இந்தநிலையில், பஹல்காம் தாக்குதலை அடுத்து சிந்து நதி நீரை நிறுத்தியது இந்தியா. இதற்கு பதிலடியாக, பதிவு செய்யப்பட்ட இந்திய விமானங்களும் இந்திய விமான நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படும் விமானங்கள் என இந்திய தொடர்பு கொண்ட அனைத்து விமானங்களுக்கும் பாகிஸ்தான் தடை விதித்தது.
பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடை செப்டம்பர் 23 வரை நீட்டித்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ததையடுத்து இந்திய விமானங்களுக்கு ஏப்ரல் 23 முதல் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில், இந்திய விமானங்களுக்கான தனது வான்வெளியை மூடும் நடவடிக்கையை, மே 24 வரை பாகிஸ்தான் நீட்டித்தது. இது இந்திய நேரப்படி மே 24 அன்று காலை 05:30 மணியாகும். மேலும் பாகிஸ்தான் வான்வெளிக்கான தடை அமலுக்கு வந்து தற்போது ஏறக்குறைய ஓராண்டு ஆகிறது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக விதிக்கப்பட்ட இந்த தடை, ஆரம்பத்தில் மே 24, 2025 வரை நீடித்திருந்தது. அதன் பின்னர், ஒவ்வொரு மாதமும் இது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், பாகிஸ்தான் விமானங்கள் தனது வான்வெளியை பயன்படுத்துவதற்கு இந்தியா ஏப்ரல் 24 அன்று காலை 05:30 மணி வரை தடை விதித்தது. மேலும், இந்த தடைக்காலம் நீட்டிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விளைவாக, இந்திய விமானங்களுக்கு சர்வதேச இடங்களுக்கு செல்ல நீண்ட வழித்தடங்களை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.