AI image 
உலக செய்திகள்

கனடாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை?

சமூக ஊடக நிறுவனங்கள் தங்களது தளங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானவை என்பதை நிரூபிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நடவடிக்கைகளை இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், டென்மார்க், தாய்லாந்து, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளும் பரிசீலித்து வருகின்றன.

இந்த நிலையில், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் சட்ட மசோதாவை கனடா அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கனடா கலாச்சாரத் துறை அமைச்சர் மார்க் மில்லர் கூறியதாவது:-

சமூக ஊடக நிறுவனங்கள் தங்களது தளங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானவை என்பதை நிரூபிக்க வேண்டும். அதில் தவறினால், 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருப்பதைத் தடுக்கும் வகையிலான சட்டம் அமல்படுத்தப்படும்.

சரிபார்ப்பு முறை

மேலும், டிஜிட்டல் பாதுகாப்பு ஆணையம் என்ற புதிய ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. சமூக ஊடக நிறுவனங்கள் தங்களது பாதுகாப்பு நடைமுறைகளை அந்த அமைப்பிடம் விளக்க வேண்டியிருக்கும். அதேசமயம், வயது சரிபார்ப்பு முறையும் கட்டாயமாக்கப்படும். நாம் நமது குழந்தைகளுக்கு துரோகம் இழைத்து வருகிறோம். இனி அது தொடரக்கூடாது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.