உலக செய்திகள்

வங்காளதேசத்தில் சில நாட்களில் பொது தேர்தல்... திடீரென பரவிய வன்முறை; 23 பேர் காயம்

துப்பாக்கி சூடு எதுவும் நடத்த உத்தரவிடப்படவில்லை என இடைக்கால அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கின்றது.

டாக்கா,

வங்காளதேசத்தில் 2024-ம் ஆண்டு மாணவர் போராட்டம் தொடர்ச்சியாக, பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த பின்னர், இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார். அந்நாட்டில், வருகிற 12-ந்தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது.

அதற்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், தலைநகர் டாக்காவில் இன்குலாப் மஞ்ச் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2025-ம் ஆண்டு டிசம்பர் மத்தியில் பல்தன் பகுதியில் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்ட அந்த அமைப்பின் தலைவரான உஸ்மான் ஹதி, சிங்கப்பூருக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அதில் பலனின்றி உயிரிழந்த நிலையில், நாடு முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை பரவியது.

இதில், இந்துக்கள் பலர் தீ வைத்தும், எரித்தும், ஆயுதங்களால் கொடூர வகையில் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டனர். இதற்கு வங்காளதேச இடைக்கால அரசு கண்டனம் தெரிவித்ததோடு நிறுத்தி கொண்டது. மத்திய அரசு குரல் எழுப்பியும் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படாத சூழல் உள்ளது.

இந்நிலையில், அதிகம் எதிர்பார்க்கப்படுகிற வங்காளதேச பொது தேர்தலில் போட்டியிட, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில், நாட்டின் இடைக்கால தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ் வீட்டை சுற்றி ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் இன்று முற்றுகையிட முயன்றனர்.

உஸ்மான் ஹதிக்கு நீதி கேட்டு அவர்கள் போராடியபோது, வன்முறை பரவியது. இதில், 23 பேர் காயம் அடைந்தனர். எனினும், துப்பாக்கி சூடு எதுவும் நடத்த உத்தரவிடப்படவில்லை என இடைக்கால அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கின்றது.