உலக செய்திகள்

வங்காளதேசத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், ஆகஸ்டு 13-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம்

டாக்கா,

வங்காளதேசத்தில் ஜனாதிபதி தேர்தல் வருகிற ஆகஸ்டு 20-ந் தேதி நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் நெருங்கிய ஆதரவாளரான ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூலை 24-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் முடிவடைய இன்னும் 2 ஆண்டுகள் இருந்த நிலையில் அவர் விலகியதால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய செயலகத்தின் மூத்த செயலாளர் அக்தர் அகமது வெளியிட்ட அறிவிப்பில், ஆகஸ்டு 20-ந் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை டாக்காவில் உள்ள தேசிய நாடாளுமன்ற கூட்ட அரங்கில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால ஜனாதிபதி

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், ஆகஸ்டு 13-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் ஆகஸ்டு 16-ந் தேதி பரிசீலிக்கப்படும். வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஆகஸ்டு 18-ந் தேதி மாலை 4 மணி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலுக்கான அட்டவணை, இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பு வகித்து வரும் நாடாளுமன்ற சபாநாயகர் ஹபீஸ் உத்தீன் அகமதுடன் ஆலோசனை நடத்திய பிறகு வெளியிடப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாராக இருப்பதாகவும், மீதமுள்ள நிர்வாக நடவடிக்கைகள் விரைவில் நிறைவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷேக் ஹசீனா

1971-ம் ஆண்டு விடுதலைப் போரில் பங்கேற்றவரும், முன்னாள் நீதிபதியுமான முகமது ஷஹாபுதீன், கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜனாதிபதியாக பதவியேற்றார். அவர் உடல்நல காரணங்களால் பதவி விலகியதாக கூறப்பட்டாலும், பிரதமர் தாரிக் ரஹ்மான் தலைமையிலான அரசுக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகின. கடந்த 2024-ம் ஆண்டு மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு கவிழ்க்கப்பட்ட நிலையில், அவர் இந்தியாவில் தஞ்சமடைந்து வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.