உலக செய்திகள்

வங்காள தேச கிரிக்கெட் வீரர் மீது அந்நாட்டு காவல்துறை தாக்குதல்

வங்காள தேச கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் நயீம் ஹசன், அந்நாட்டு காவல்துறை அதிகாரிகளால் கொடூரமாக தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்கா,

நேற்று இரவு (12) சட்டோகிராமில் நயீம் ஹசன் காவல்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு போட்டியில் பங்கேற்றுவிட்டு காரில் வீடு திரும்பி கொண்டிருந்த நயீமை, சட்டோகிராமின் லல்கான் பஜார் பகுதியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

புறக்கணித்து

பின்னர் அவர் வலுக்கட்டாயமாக மற்றொரு காரில் ஏற்றப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றியிருந்த மக்களும் நயீமும் அவர் ஒரு தேசிய கிரிக்கெட் வீரர் என்று கூறியபோதிலும், காவல்துறை அதிகாரிகள் அவர்களை புறக்கணித்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

மனிதாபிமானமற்ற சம்பவம்

பின்னர் காவல்துறை அதிகாரிகள் தடிகளாலும் பிளாஸ்டிக் குழாய்களாலும் தன்னை ஈவிரக்கமின்றி அடித்ததாக நயீம் கூறுகிறார். இந்த மனிதாபிமானமற்ற சம்பவத்தில் நியாயமான விசாரணையும் நீதியும் வேண்டும் என்று நயீம் மேலும் கூறியுள்ளார். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. இதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை காவலில் இருந்த நயீம்,இன்று காலை விடுதலையாகி வீடு திரும்பினார். அவருக்கு நேர்ந்த இந்த மனிதாபிமானமற்ற மற்றும் அநியாயமான செயலுக்கு, பல கிரிக்கெட் வீரர்கள் தங்களது சமூக வலைதளங்களில் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.