உலக செய்திகள்

இந்தியாவில் இருந்து வந்த சிறந்த நண்பர் பிரதமர் மோடி; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மலேசிய பிரதமர்

ஒரு சிறந்த மலேசியாவை கட்டமைக்கும் முயற்சியில், இந்திய சமூகத்தினரும் இருப்பார்கள் என மலேசிய பிரதமர் கூறினார்.

கோலாலம்பூர்,

பிரதமர் மோடியின் மலேசிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக கோலாலம்பூரில் இந்திய வம்சாவளியினர் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் இரு நாட்டு பிரதமர்களும் கலந்து கொண்டனர். இதில், மலேசிய ​​பிரதமர் அன்வர் இப்ராகிம் பேசும்போது, இந்தியாவில் இருந்து வந்து மலேசியாவில் எங்களுடன் இணைந்து கொண்ட சிறந்த நண்பர் பிரதமர் மோடி என்பதில் நான் தனிப்பட்ட முறையில் பெரிய அளவில் ஆச்சரியம் அடைந்தேன்.

அவருக்கு என்னுடைய நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். திரளாக கூடியிருக்கும் இந்த கூட்டம், இரு நாடுகளுக்கு இடையேயான ஆழ்ந்த மற்றும் வலிமையான பிணைப்பை வெளிப்படுத்துகிறது. நீண்ட காலத்திற்கு முன்பு தூதரகங்களும், வர்த்தக ஒப்பந்தங்களும் இருந்தன.

இதேபோன்று நாடுகள், வர்த்தகர்கள், பண்டிதர்கள், கடல் மாலுமிகள் என இந்திய துணை கண்டத்திற்கும் மற்றும் மலாய் தீவுக்கும் இடையே இந்திய பெருங்கடல் முழுவதும் பயணம் இருந்தது. பாலியாத்திரையானது, மிக பழமையான கடல்சார் பயணங்களில் ஒன்றாக இந்தியாவால் நினைவுகூரப்பட்டது என்று குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, ஒரு சிறந்த மலேசியாவை கட்டமைக்கும் முயற்சியில், இந்திய சமூகத்தினர், என்னுடைய சகோதரர்கள் மற்றும் சகோதரிகள், இந்த பயணத்தின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக இருப்பார்கள் என பிரதமர் மோடிக்கு நான் உறுதியளிக்கிறேன் என கூறினார்.

அதற்கு முன் மலேசியாவுக்கு சென்று சேர்ந்த பிரதமர் மோடியை மலேசிய ​​பிரதமர் அன்வர் இப்ராகிம் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். இதன்பின்னர், சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்ற இருவரையும், கைகளில் இந்திய மற்றும் மலேசிய கொடிகளை அசைத்தபடி, பள்ளி மாணவ மாணவியர் வரவேற்றனர்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த பெரிய அளவிலான குழுவினரும் பிரதமர் மோடியை வரவேற்க காத்திருந்தனர். இதன்பின்னர் இருவரும் ஒரே காரில் ஒன்றாக பயணித்து ஓட்டலுக்கு சென்றனர்.