வாஷிங்டன்:
அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு முன்பே, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் தாக்குதல் நடத்த அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. வெளியிட்ட ஆவணங்களில் தெரியவந்துள்ளது. இரட்டை கோபுர தாக்குதலின் 25-வது ஆண்டு நினைவையொட்டி, பின்லேடன் மற்றும் அல்கொய்தா தொடர்பான 70-க்கும் மேற்பட்ட ரகசிய உளவு ஆவணங்களை சி.ஐ.ஏ. வெளியிட்டுள்ளது. 1998-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உளவு தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
1998-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ந் தேதி அமெரிக்க ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட உளவு அறிக்கையில், பின்லேடன் பல்வேறு நாடுகளில் தாக்குதல் நடத்த விரும்பியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த பட்டியலில் இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, குவைத், சவுதி அரேபியா, ஏமன், உகாண்டா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.அதே நேரத்தில், இந்தியாவில் எந்த குறிப்பிட்ட இடத்தை தாக்குவது, எப்போது தாக்குதல் நடத்துவது அல்லது அதற்கான துல்லியமான செயல்திட்டம் என்ன என்பது குறித்த தகவல்கள் அந்த ஆவணத்தில் இடம்பெறவில்லை. மேலும், தகவலின் மூலமும் மறைக்கப்பட்டுள்ளது.