கிங்ஸ்டன்,
உலகின் அதிவேக மனிதரான உசைன் போல்ட், தனது 40-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நீண்டநாள் காதலியான காசி பென்னட்டுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
ஜமைக்கா நாட்டின் கிங்ஸ்டன் நகரில் உள்ள 'ஒன் பெல்மாண்ட்' என்ற ஹோட்டலின் கடைசி மாடியில் வைத்து கடந்த 21-ந்தேதி அன்று உசைன் போல்ட்டின் பிறந்தநாள் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழா மேடையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், உசைன் போல்ட் கையில் மைக்ரோ போனுடன் திடீரென மண்டியிட்டு காசி பென்னட்டிடம் தனது திருமண விருப்பத்தைத் தெரிவித்தார்.
உசைன் போல்ட்டின் இந்த திடீர் அறிவிப்பைக் காசி பென்னட் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆச்சரியத்தில் உறைந்து போன அவர், மகிழ்ச்சியுடன் தனது சம்மதத்தைக் கூறினார். பின்னர், பேரிக்காய் வடிவிலான பிரம்மாண்ட 5 காரட் வைர மோதிரத்தை காசிக்கு போல்ட் அணிவித்தார்.
அந்த நிகழ்வின் போது இருவரும் ஒரே நிறத்திலான (இளம் பச்சை) ஆடைகளை அணிந்திருந்தது விழாவின் கூடுதல் சிறப்பாக அமைந்தது. இதுகுறித்து காசி பென்னட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். போல்ட்டின் கைகளில் உணர்ச்சிவசப்பட்டு அழுதபடி இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, "என் முகம் ஆச்சரியத்தில் உறைந்துவிட்டது" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
உசைன் போல்ட் மற்றும் காசி பென்னட் ஆகிய 2 பேரின் காதல் பயணம் 2013-ம் ஆண்டு தொடங்கியது. ஆனால் 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியின்போது தான் இவர்கள் தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக உலகிற்கு அறிவித்தனர். திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு 6 வயதில் ஒலிம்பியா லைட்னிங் என்ற மகளும், 5 வயதில் தண்டர் மற்றும் செயின்ட் லியோ என்ற இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
ஒலிம்பிக்கில் 8 முறை தங்கப் பதக்கம் வென்று தடகள உலகின் ஜாம்பவானாகத் திகழும் உசைன் போல்ட், விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தனது குடும்ப வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியிருக்கிறார். சமூக வலைதளங்களில் இவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், உலகெங்கிலும் உள்ள விளையாட்டு ரசிகர்களும் பிரபலங்களும் இந்த தம்பதியருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.