வாஷிங்டன்,
அமெரிக்காவின் நியூமெக்சிகோ மாகாணம் யூனியன் கவுண்டி நகரின் கிலாட்ஸ்டோன் பகுதியில் வனப்பகுதி உள்ளது. அந்த வனப்பகுதியில் உள்ள சாலையோரம் மின்கம்பங்கள் அமைந்துள்ளன.
அந்த மின்கம்பத்தில் கடந்த 20ம் தேதி கரடி ஏறியுள்ளது. 22 அடி உயரம் கொண்ட அந்த மின்கம்பத்தில் ஏறிய கரடி அதன் உச்சிக்கே சென்றுள்ளது. அப்போது மின்கம்பத்தின் ஒயரில் கரடியின் உடல்பாகங்கள் பட்டதால் அதன்மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்துள்ளது.
கரடி மின் கம்பத்தின் உச்சியில் இருப்பதை பார்த்த வாகன ஓட்டிகள் உடனடியாக போலீசார், மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மின்சாரம் தாக்கிய கரடியை உயிருடன் மீட்க முயன்றனர். ஆனால், மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த கரடி மின்கம்பத்தின் உச்சியிலேயே உயிரிழந்தது. இதையடுத்து, மின்கம்ப உச்சியில் இருந்து கரடியின் உடலை கீழே இறக்கிய போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரடி மின்கம்பத்தின் உச்சியில் இருந்த வீடியோ, புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.