உலக செய்திகள்

2027-க்குள் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பி.எம்.டபிள்யூ

பி.எம்.டபிள்யூ! நிறுவனத்தில் உலகம் முழுவதும் சுமார் 1,50,000 பேர் பணிபுரிகின்றனர்.

பெர்லின்,

2027ஆம் ஆண்டுக்குள் ஜெர்மனியில் உள்ள சுமார் 8,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாகப் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபிள்யூ! அறிவித்துள்ளது.

பணிநீக்கம்

ஜெர்மனியின் முனிச் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபிள்யூ (BMW), 2027ஆம் ஆண்டுக்குள் ஜெர்மனியில் உள்ள சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றும் இந்த நிறுவனம், சீனாவில் நிலவும் கடுமையான போட்டி மற்றும் மந்தமான உலக பொருளாதாரச் சூழல் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

குறைக்கும் நடவடிக்கை

மேலும், மின்சார வாகனங்களின் அதிக உற்பத்திச் செலவு, சீன நிறுவனங்களின் போட்டி மற்றும் அமெரிக்காவின் கூடுதல் இறக்குமதி வரிகள் ஆகியவை ஜெர்மனியின் வாகனத் துறையை கடுமையாக பாதித்துள்ளன. இதன் காரணமாக வோக்ஸ்வேகன் மற்றும் மெர்சிடீஸ்-பென்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் ஏற்கனவே ஊழியர்களைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

ஒப்பந்தம்

பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் இந்த ஆட்குறைப்பு, தொழிலாளர் நலச்சங்கத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிர்வாகம் மற்றும் ஆராய்ச்சி-மேம்பாட்டு (R&D) பிரிவுகளில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. உற்பத்திப் பிரிவு ஊழியர்களுக்கு இந்த நடவடிக்கையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.