உலக செய்திகள்

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களின் உடல்கள் விமானம் மூலம் மும்பைக்கு அனுப்பி வைப்பு

வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானத்தில் உடல்களை இந்தியாவிற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஹனோய்,

வியட்நாமின் பூ குவோக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற அதிவேகப் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 15 பேர் உயிரிழந்ததாக வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்துக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர், கேரளாவை சேர்ந்த 2 பேர் மற்றும் ஆந்திராவை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அதே சமயம், விபத்தில் சிக்கிய 17 இந்திய சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 16 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு நபர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்த வியட்நாம் பிரதமர் லே மின் ஹுங் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த இந்திய சுற்றுலா பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்த உடல்களை இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்கான நடைமுறைகள் அனைத்து முடிவடைந்த நிலையில், 15 இந்தியர்களின் உடல்களும் இன்று வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஹோசிமின் நகரில் இருந்து மும்பை கொண்டு வரப்படுகின்றன.

SCROLL FOR NEXT