உலக செய்திகள்

எல்லை பிரச்சினை: இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும் தீர்வுக்கு தயார் - சீனா அறிவிப்பு

இந்தியாவுடனான எல்லை பிரச்சினையில் இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளும் தீர்வுக்கு தயார் என சீனா அறிவித்து உள்ளது.

தினத்தந்தி

பீஜிங்,

கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சி காரணமாக கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதலும், உயிரிழப்பும் அந்த பிராந்தியத்தை பதற்றம் நிறைந்த பகுதியாக தொடர்ந்து வைத்திருக்கிறது. அங்கு, சர்ச்சைக்குரிய பகுதிகள் அனைத்திலும் இருந்து படைகளை விலக்க இந்தியா வலியுறுத்தி வருகிறது. ஆனால் சீனா தரப்பில் இருந்து இதில் நெகிழ்வுத்தன்மை காணப்படாததால் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.

இந்த நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 333வௌயுறவு மந்திரிகள் மட்டத்திலான கருத்தரங்கு ஒன்று தஜிகிஸ்தான் தலைநகர் துசான்பேயில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இடையே இந்தியா, சீனா வெளியுறவு மந்திரிகள் முறையே ஜெய்சங்கர், வாங் யி ஆகியோர் சந்தித்து பேசினர்.

இந்த கூட்டத்தில் சீனா தரப்பில் வாங் யி எடுத்து வைத்த கருத்துகளை அந்த நாடு நேற்று வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக சீன செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சீனா-இந்தியா எல்லையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு பின் உள்ள உண்மைகளை சீன வெளியுறவு மந்திரி தெளிவாக சுட்டிக்காட்டினார். அத்துடன் இந்த பிரச்சினையில் சீனா மீது குற்றம் சுமத்த முடியாது என்பதையும் எடுத்துரைத்தார். அதேநேரம் இந்தியாவுடனான எல்லை பிரச்சினையில் அவசர சிகிச்சை போன்று தேவைப்படும் இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி எட்டுவதற்கு சீனா தயாராக இருக்கிறது.

இரு நாட்டு படைகளை திரும்ப பெற்றதன் மூலம் கிடைத்த விளைவுகளை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவம், சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளை தவிர்ப்பது மற்றும் தவறான புரிதல், தவறான கணக்கீடு ஆகியவற்றின் விளைவாக மீண்டும் மோதல்கள் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.

எல்லை தொடர்பான சம்பவங்கள் இரு தரப்பு உறவுகளுக்கு தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்துவதை தடுக்க இரு நாடுகளும் நீண்ட கால பார்வையை கொண்டிருக்க வேண்டும்.

இரு நாட்டு வெளியுறவு மந்திரிகளும் கடந்த ஆண்டு மாஸ்கோவில் சந்தித்ததில் இருந்து, கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் பங்கோங் சோ பகுதிகளில் இருந்து இரு நாட்டு முன்கள படைகளும் திரும்ப பெறப்பட்டு உள்ளன. அத்துடன் இரு நாட்டு எல்லைப்பகுதி சூழல் பொதுவாக தளர்த்தப்பட்டு வருகிறது.

ஆனாலும் இரு நாட்டு உறவுகள் இன்னும் மந்தமாகவே உள்ளது. இது யாருடைய நலன்களுக்கும் உதவாது. இருதரப்பு உறவுகள் குறித்த சீனாவின் மூலோபாய பார்வை மாறாமல் உள்ளது. மேலும் எந்த நாடும் ஒருவருக்கொருவர் அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது, ஆனால் ஒருவருக்கொருவர் வளர்ச்சிக்கு ஒரு வாய்ப்பாக இருக்க வேண்டும். சீனாவும் இந்தியாவும் பங்காளிகளாக இருக்கின்றன போட்டியாளர்களாக அல்ல.

தற்போதைய நிலையில் சீனாவும், இந்தியாவும் பிராந்தியம் மற்றும் சர்வதேசத்தின் அமைதி மற்றும் செழிப்புக்கு முன்னெப்போதையும் விட முக்கியமான பொறுப்புகளை ஏற்கின்றன.

இவ்வாறு வாங் யி கூறியதாக சீனா கூறியுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்