உலக செய்திகள்

வெள்ளை மாளிகையில் குத்துச்சண்டை போட்டி: ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க நாணயம் வெளியிட்ட டிரம்ப் குடும்பத்தினர்

டிரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் டிரம்ப் ஆகியோரால் நடத்தப்படும் 'டிரம்ப் ஆர்கனைசேஷன்' நிறுவனம் இந்த வணிக முயற்சியை மேற்கொண்டுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா மற்றும் ஜனாதிபதி டிரம்பின் 80-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், வெள்ளை மாளிகையில் தொழில்முறை குத்துச்சண்டை போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குத்துச்சண்டை போட்டி

வெள்ளை மாளிகையில் தொழிற்முறை விளையாட்டுப் போட்டி ஒன்று நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க குத்துச்சண்டை போட்டியை முன்னிட்டு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குடும்பத்தினர் புதிய அதிகாரப்பூர்வ நினைவு நாணயங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

டிரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் டிரம்ப் ஆகியோரால் நடத்தப்படும் 'டிரம்ப் ஆர்கனைசேஷன்' நிறுவனம் இந்த வணிக முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த சேகரிப்பு நாணயங்களின் அதிகபட்ச விலை, பிரீமியம் தங்கப்பதிப்பிற்கு 11 ஆயிரத்து 999 டாலர்கள் (ரூ.10 லட்சம்) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் இந்த நாணயங்கள் விற்கப்படுகின்றன. டிரம்ப் அவர்களால் நேரடியாக அங்கீகரிக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்ட ஒரே அதிகாரப்பூர்வ நாணயங்கள் இவை மட்டுமே என்று விளம்பரப்படுத்தப்படுகிறது.