டொராண்டோ,
கனடா டொராண்டோ நகரில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிமான்ஷி குரானா (வயது 30) கடந்த ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி வீட்டில் பிணமாக கிடந்தார். விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக ஹிமான்ஷி குரானாவின் காதலனான டொராண்டோவைச் சேர்ந்த அப்துல் கபூரி மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான அப்துல் கபூரியை போலீசார் தேடி வந்தனர். அவரது புகைப்படத்தையும் வெளியிட்டு, அவரைப் பற்றிய தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த நிலையில் தலைமறைவான 7 மாதங்களுக்கு பிறகு அப்துல் கபூரியை போலீசார் கைது செய்தனர். வேறு நாட்டுக்குத் தப்பிச் சென்ற அவரை போலீசார் கைது செய்து கனடாவுக்கு அழைத்து வந்தனர். அவர் எந்த நாட்டில் இருந்தார் என்பதைத் குறிப்பிடாமல், டொராண்டோ காவல்துறையின் தலைமறைவுக் குற்றவாளிகளைப் பிடிக்கும் பிரிவு மற்றும் கொலை வழக்குகளை விசாரிக்கும் பிரிவு அதிகாரிகள், அவரைக் கனடாவுக்குக் கொண்டுவர தேசிய, சர்வதேச காவல் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டதாக போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.