image courtesy: The Times 
உலக செய்திகள்

ரஷிய கோடீஸ்வரரின் ஜெட் விமானங்களை பறிமுதல் செய்த இங்கிலாந்து...!

ரஷிய கோடீஸ்வரரான யூஜின் ஷ்விட்லருக்கு சொந்தமான ஜெட் விமானங்களை இங்கிலாந்து பறிமுதல் செய்துள்ளது.

லண்டன்,

ரஷியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர்களில் ஒருவரான யூஜின் ஷ்விட்லருக்கு சொந்தமான இரண்டு ஜெட் விமானங்களை இங்கிலாந்து பறிமுதல் செய்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா ராணுவத் தாக்குதலை தொடுத்து ஏறக்குறைய ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்பும் மேலை நாட்டு அரசாங்கங்கள் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருங்கிய ஆதரவாளர்களின் ஆடம்பர வாழ்க்கையை குறிவைத்து அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

ரஷிய நிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்கள் மீது புதிய தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் போரை ஆதரித்தவர்களுடன் ஷ்விட்லருக்கு இருந்த தொடர்புகள் காரணமாகவும், புதின் ஆட்சிக்கு அவர் அளித்த ஆதரவில் இருந்து அவர் லாபம் அடைந்ததாலும் ஷ்விட்லரின் விமானங்களை பிரிட்டன் அரசு பறிமுதல் செய்துள்ளது.

இதுகுறித்து கருவூல செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ், மூன்று வார விசாரணைக்குப் பிறகு, காலவரையின்றி விமானங்கள் தடுத்து வைக்கப்படும். புதினின் ஆட்சியில் கோடிக்கணக்கில் சம்பாதித்த அவரது நண்பர்கள், அப்பாவி மக்கள் சாகும்போது ஆடம்பரங்களை அனுபவிக்க மாட்டார்கள் என்று கூறினார்.