பெல்ஜியத்தில் வீட்டைப் புதுப்பிக்கும் பணியின்போது, அடித்தளச் சுவர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 98 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க புதையலை தொழிலாளர்கள் கண்டுபிடித்தனர்.
பெல்ஜியத்தின் கிழக்கு ஃபிளாண்டர்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் புதிய கழிவு நீர் குழாய்களை பதிப்பதற்காக அண்டர்கிரவுண்ட் அறையின் சுவரில் துளையிடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுவர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிய தங்க நாணயங்கள் மற்றும் 50 பெரிய தங்க கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இந்த புதையலின் மதிப்பு 1 கோடியே 40 லட்சம் அமெரிக்க டாலர் இருக்கும் (இந்திய ரூபாய் மதிப்பில் 98 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.
தங்கப்புதையல் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் அங்கு வந்து புதையலை கைப்பற்றி சென்றனர். தங்கப் புதையல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதையலைத் தேடும் ஆசையில் கட்டுமானப் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று உள்ளூர் காவல்துறையினர் பொது மக்களை வலியுறுத்தியுள்ளனர். அந்த இடம் முழுமையாகச் சோதிக்கப்பட்டு, தங்கம் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பெல்ஜிய நாட்டின் சட்டத்தின்படி, புதையலை உரிமை கோருவதற்கு அதன் உண்மையான உரிமையாளருக்கு 5 ஆண்டுகள் அவகாசம் உள்ளது. புதையலை கண்டுபிடித்த கட்டுமான நிறுவனமும், அந்த வீட்டின் உரிமையாளரான உள்ளூர் தொண்டு நிறுவனமும் புதையலுக்கு உரிமை கோருவதற்கான வாய்ப்புள்ளது.
சரியான உரிமையாளர் யார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என விசாரணை அதிகாரி கூறியுள்ளார். யாரும் உரிமை கோரவில்லை என்றாலோ, சரியான உரிமையாளர் கண்டறியப்படவில்லை என்றாலோ, கண்டுபிடித்தவர்களுக்கும் சொத்தின் உரிமையாளருக்கும் புதையல் சமமாகப் பகிர்ந்து வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆயினும், புதையலுக்கும் குற்றச் செயல்களுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை எனக் கண்டறியப்பட்டால் மட்டுமே இந்த விதி பொருந்தும்.