உலக செய்திகள்

கனடா: சீக்கிய மத வழிபாட்டு தலத்தில் கத்திக்குத்து தாக்குதல் - 2 பேர் படுகாயம்

தாக்குதல் நடத்திய இளைஞரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஒட்டாவா,

கனடாவில் இந்தியாவை சேர்ந்த சீக்கியர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். மேலும், அந்நாட்டில் சீக்கிய மத வழிபாட்டு தலங்களும் ஏராளமாக உள்ளன.

இதனிடையே, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் எட்மன்டன் நகரில் சீக்கிய மத வழிபாட்டு தலமான குருத்வாரா செயல்பட்டு வருகிறது. இந்த குருத்வாராவுக்கு தினமும் ஏராளமான சீக்கியர்கள் வந்து வழிபாடு செய்வது வழக்கம்.

கத்திக்குத்து தாக்குதல்

இந்நிலையில், எட்மன்டன் நகரில் உள்ள குருத்வாராவுக்கு இன்று அதிகாலை 4.30 மணியளவில் 27 வயதான இளைஞர் வந்துள்ளார். அவர் குருத்வாராவில் வழிபாடு நடத்த உள்ளே நுழைந்துள்ளார். அப்போது அங்கிருந்த குருத்துவாரா பாதுகாவலர்கள் இருவர் அதிகாலை என்பதால் அனுமதியில்லை என கூறியுள்ளனர். அப்போது, அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த இளைஞர் தான் வைத்திருந்த கத்தி, ஸ்ருகுடிரைவரால் இருவரையும் சரமாரியாக குத்துள்ளார். இந்த கத்திக்குத்து தாக்குதலில் இருவரும் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதல் குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று காயமடைந்த இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, தாக்குதல் நடத்திய இளைஞரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞரின் பெயர் உள்ளிட்ட விவரம் இதுவரை வெளியாகவில்லை.